×

கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்; தனியார் மருத்துவமனைக்கு சீல்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (31). இவரது மனைவி சங்கீதா (28). இந்த தம்பதிக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய சங்கீதாவுக்கு 2 வாரங்கள் கழித்து, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வயிற்றில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியதன் பேரில், 2வது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அதன்பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வந்த சங்கீதாவுக்கு, நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 3வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் உடல்நிலை மோசமான சங்கீதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான், சங்கீதா உயிரிழந்ததாக கூறிய அவரது உறவினர்கள், மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். மேலும், சங்கீதாவின் சாவுக்கு காரணமான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் திடீரென வெள்ளாண்டிவலசை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் எனவும் உறவினர்கள் கூறினர். இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் வந்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்த சங்கீதாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10பேரையும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்பின் சமாதானமடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். …

The post கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்; தனியார் மருத்துவமனைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Bhupathi ,Sauriyur ,Jalagandapuram, Salem district ,Sangeeta ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...